அறியா மந்திரம்
புயலைப்போல
மேல்மூச்சு வாங்கி
புகை நுகர்ந்து
செவி கிழிக்கும்
பம்பைச் சத்தம் சூழ
கற்பூர ஜுவாலையை
கபக்கென்று நாவுக்குள் அமுக்கி
புரியாத மொழியாய்
சப்தித்து
ஆக்ரோஷமாய்க் காட்சியளித்து
சுத்துப்பட்டி எட்டு
கிராம சனங்களும்
கன்னம் தொட்டுச்
சேவித்து நிற்க
ஊருக்கெல்லாம்
குறி சொல்லும்
கோடி வீட்டுச் சாமிக்கு
ஏனோ தெரியவில்லை
போலியோவால்
முடங்கிய
தன் மகனின்
கால்களைச்
சரிபண்ணும் வித்தை மட்டும்.
இரா. இலட்சுமணன்
கருத்துகள்
கருத்துரையிடுக