நேற்றைய பிணங்களும் முந்தைய எலும்புக் கூடுகளும்
புதர் மண்டிக் கிடக்கும்
கல்லறைத் தோட்டங்கள்
ஆர்ப்பாட்டமாய்க் கழித்த பொழுதுகள் முடிந்து
நெருக்க நெருக்கமாய்
புதைந்து போன உடற் சருகுகள் !
வசீகரம் இழந்து நிற்கும்
சிலுவைக் கோடுகள் !
சோகம் கவ்விக்கொள்ள
என்ன இருக்கிறது ?
பிறப்பும், திருமணமும் போல
மரணமும் ஒரு நிகழ்வு !
எவரில்லா விடின்
இருள் சூழ்ந்து விடும் ?
நேற்றைய பிணங்களும்
முந்தைய எலும்புக் கூடுகளும்
வரிசையாக்க மண்ணுக்குள் !
இறந்தவர்
சுமப்பவர்
பேதமின்றிப்
புன்னகையோடு வரவேற்கும்
மயானப் பூக்கள் !
இரா. இலட்சுமணன்
கருத்துகள்
கருத்துரையிடுக